Saturday, April 19, 2014

யார் இந்த ஹக்கீம் ?

யிரத்திற்கும் அதிகமானவர்கள் கூடியிருந்த அந்த அரங்கில் அனைவரது பார்வையும் மேடையில் இருக்க, பார்வையில் இல்லாத ஒருவர் மேடை ஏற்றப்பட்டு இவர்தான் இந்த ஆண்டில் சிறந்த இளம் சாதனையாளர் ஹக்கீம் என்று அறிவித்து 'பெட்டகம்' அமைப்பினர் கௌரவ விருதினை வழங்கியபோது மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியது
யார் இந்த ஹக்கீம்
கோவை போத்தனுாரில் கூலி தொழிலாளியான முகம்மதிற்கும், சாலிஹாவிற்கும் பிறந்தவர்தான் ஹக்கீம். பிறவியிலேயே பார்வை இல்லை. ஆனால் அதை குறையாக எண்ணாமல் அடுத்து என்ன என்ற எண்ணத்துடன் வளர்ந்தார்.
பார்வை குறைபாட்டை கொடுத்த அதே இறைவன் இவருக்கு அபார ஞாபகசத்தியை கொடுத்தார். இதனால் ஆரம்பத்தில் பார்வையற்ற பள்ளியில் படித்தவர் அனைவருக்குமான பள்ளியில் பிரமாதமாக படித்தார், படிக்கும் போதே தான் ஒரு ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து. நினைத்தபடியே இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் ஆசிரியர் பணியில் அமர்ந்தார்.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகிறது ஆசிரியராகி இப்போது இவரது வகுப்பு என்றால் மாணவர்களுக்கு பிரியம் அதிகம் அந்த அளவிற்கு மிகச்சிறப்பாக பாடம் நடத்துகிறார், மாணவர்களை மதிப்பெண் எடுக்கவைக்கிறார். மொத்தத்தில் தான் பயிற்றுவிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இதுவரை இவரிடம் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்துள்ளனர் அனைவருமே சமூக அறிவியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளனர். இதற்கு இவர் பாடம் நடத்தும் முறையும் ஒரு காரணம்.தனது அபார ஞாபக திறன் காரணமாக பாடப் புத்தகங்களையும், பாடதிட்டங்களையும் உள்வாங்கிக் கொண்டுள்ள இவர் அதனை மாணவர்கள் மனதில் உட்காரும் வகையில் அருமையாக சுவராசியமாக நடத்துகிறார். இதன் காரணமாக மாணவர்கள் துாக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட பதில் சொல்லுமளவிற்கு பாடத்தில் தெளிவாக இருக்கின்றனர்.
முப்பத்திரண்டு வயதான ஹக்கீமுக்கு திருமணமாகிவிட்டது மனைவி சபியா.கணவரின் கண்ணாக செயல்படுகிறார்.
ஹக்கீம் போத்தனுாரில் இருந்து தனியாகவே பஸ் ஏறி பள்ளிக்கு வந்துவிடுவார், கேட்டால் என்னால் முடியும் என்ற நம்பிக்கை முதலில் எனக்குள் வரவேண்டும் அப்படி வந்தால்தான் நான் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கமுடியும் என்பவர் எப்போதுமே யாரிடம் இருந்தும் இரக்கத்தை எதிர்பார்ப்பவர் அல்ல.
மாணவர்கள் குறும்பானவர்கள்தான் ஆனால் அவர்களை மதித்தால் அவர்களைப் போல அன்பானவர்களை எங்கும் பார்க்கமுடியாது அவர்களது அகக்கண்ணை திறக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும் அந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லும் ஹக்கீமை பாராட்ட நினைப்பவர்கள் அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9344479898.(பள்ளி நேரங்களிலும்,பாடதிட்டத்தை தயாரிக்கும் நேரங்களிலும் போனை எடுக்கமாட்டார் பிறகு வீட்டில் உள்ளோர் துணையுடன் மிஸ்டு கால் பார்த்து அனைவருடனும் பேசிவிடுவார்)
- எல்.முருகராஜ்
http://www.dinamalar.com/news_detail.asp?id=958105

1 comment:

  1. ஊணத்தை வென்று சாதனை செய்துவரும் சகோ ஹக்கீம் அவர்களுக்கு ஏக இறைவன் நல்லருள் புரிவானாக ..

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!