Friday, August 22, 2014

பள்ளிவாசல்களை பன்முக காரியங்களுக்கு பயன்படுத்த சிந்திப்போமா !?

“அல்லாஹு அக்பர் என்று முழங்கும் 
அழகிய தலமே பள்ளிவாசல் 
எல்லா மாந்தரும் தொழவாருங்கள்
என்றே அழைப்பது பள்ளிவாசல் – மிக 
நன்றாய் அழைப்பது பள்ளிவாசல் “

என்ற பாடல் முழங்காத இடமில்லை. இறைவனின் இல்லம் என்று அழைக்கப்படும் பள்ளிவாசல்கள், இறைவனின் பெரும் கருணையினால் இதுவரை பள்ளிவாசல்கள் இல்லாத  கிராமங்கள் மற்றும் தெருக்கள்  தோறும் கட்டப்பட்டு வருகின்றன. பல பெரிய ஜமாத்கள் இருக்கும் ஊர்களில் ஏற்கனவே இருக்கும் பள்ளிவாசல்கள் விரிவுபடுத்தப்படுவதுடன் குளிர்சாதனங்கள் போன்றவைகள் பொருத்தப்பட்டு நவீன வசதிகள் கொண்டவைகளாகவும் ஆக்கப்படுகின்றன. அரபுநாடுகளுக்கு சென்று நம்மில் பலர் பொருள் ஈட்டத் தொடங்கியதன் விளைவாக அந்த நாடுகளில் அமைந்திருக்கும் பாணிகளிலும் டிசைன்களிலும்  பல ஊர்களிலும் பிரம்மாண்டமான பள்ளிவாசல்கள்    அமையத் தொடங்கிவிட்டன. மேலும், கருத்து மாறுபாடுகளால் தோன்றிய பல்வேறு இயக்கங்களினால் சமுதாயத்துக்கு எவ்விதப் பயனும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஏறக்குறைய ஒவ்வொரு ஊரிலும் புதிய பள்ளிகள் ஊருக்கு வெளியேயாவது நிர்மாணிக்கப்படுவதையும் நாம் மறுக்க இயலாது.

அதே நேரத்தில் பள்ளிவாசல்கள் என்பவை ஐந்து நேரம் ஒன்று கூடி இறைவனை வணங்க மட்டும்தானா அல்லது சமுதாயத்துக்குப் பயன்படும் வேறு பல காரியங்களுக்கும் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தலாமா என்பது பற்றி நாம் விவாதிக்க வேண்டி இருக்கிறது. இன்றும் கூட,  பள்ளிவாசல்கள் வேறு சில காரியங்களுக்கும் பொதுவாகப் பயன்படத்தான் செய்கின்றன.

எடுத்துகாட்டுக்களாக,
தெரு அல்லது ஊரில் ஏற்படும் தனி நபர்  அல்லது குடும்பப்பிரச்சனைகளை பள்ளிவாசல்களில் கூடி பஞ்சாயத்தாகப் பேசுவதற்கு கூடுமிடமாகப் பள்ளிவாசல்கள் பயன்படுகின்றன.

திருமணம் போன்ற காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்று வருகின்றன.

பல ஊர்களில் விருந்து போன்ற காரியங்களுக்கான சமையல்கூடமாகவும் விருந்து பரிமாறப்படும் இடங்களாகவும்  பள்ளிவாசல்கள் பயன்படுத்தப் படுகின்றன.

இயல்பாகவே பள்ளிவாசல்களில் மதரசாக்கள் இயக்கப்படுகின்றன.
குழந்தைகள் காலை மாலை வேளைகளில் வந்து திருக்குர்-ஆன் பயின்று வருகிறார்கள்.

இவை போக அஸருக்கு பாங்கொலிக்கும் வரை காற்றாடப் படுத்து உறங்கும்/ ஒய்வு எடுக்கும் இடங்களாகவும்  பள்ளிகள் பயன்படுத்தப்படுவதையும் நாம் மறுக்க இயலாது.

இந்தப் பயன்பாடுகள் மட்டும் போதுமா ?
பள்ளிவாசல்களை  இன்னும் அதிகமான நன்மையான காரியங்களுக்குரிய இடமாகவும் பயன்படுத்த வேண்டும்.

பெருமானார் ( ஸல் ) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் கல்விக் கூடங்களாகவும், நல்லொழுக்கப்பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கும் இடங்களாகவும், இலக்கியம் முதலிய நிகழ்வுகள் அரங்கேறும் இடமாகவும், உடல்நலம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் இடமாகவும் , பொதுவான பிரச்சனைகள் அல்லது இடர்பாடுகள் நேரிடும்போது ஊரெல்லாம் ஒன்று கூடி தொழுகை நடத்தும் இடமாகவும், மருத்துவமனையாகவும், வெளியூர்களிலிருந்தும் பல சமயங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தங்க வைக்கும் இடமாகவும் , போர்களுக்குத் தயாராவதற்கான வியூகங்களை விவாதிக்கும் இடமாகவும், நீதிமன்றமாகவும் பயன்படுத்தப்பட்டதாக நாம் அறிகிறோம். அதுமட்டுமல்லாமல் பள்ளிவாசல்கள் சிறைச்சாலைகளாகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் நாம் சரித்திரத்தில் படித்து தெரிந்து கொள்கிறோம்.  

இன்றைக்கு இந்த சமுதாயத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடைகள் மூலம் உயர்ந்த மினாராக்கள்,  அருமையான அலங்காரங்கள்  , வண்ண வண்ண விளக்கு வெளிச்சங்கள், ஆகியவற்றை அமைத்து தேவைக்கும் அதிகமான இடங்களை எல்லாம் வளைத்துப் பெரிய அளவில் பள்ளிகளைக் கட்டி வருகிறோம். பெரும்பாலான நேரங்களில் தொழுகை நேரம் அல்லது மதரசா நேரம் முடிந்ததும் பள்ளிகள் பூட்டுப் போட்டுப் பூட்டி வைக்கப்படுகின்றன.

பள்ளிவாசல்களை  என்னென்ன நன்மையான காரியங்களுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி நமது மனதில் தோன்றும் சில எண்ணங்கள்.

நூலகம்:-
பள்ளிவாசல்களில் நூலகங்கள் அமைக்கலாம். இன்றும் பல பள்ளிகளில் குர் ஆன்,  ஹதீஸ்,  துஆக்கள் அடங்கிய  அரபு மற்றும் தமிழ் மொழியில் உள்ள நூல்கள் சேகரிக்கப்பட்டு அல்லது வக்பு செய்யப்பட்டு அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை எடுத்துப் படிப்போர் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே. காரணம் இந்த நூல்கள் பெரும்பாலும் மார்க்கம் சார்ந்த நூல்கள் மட்டுமே. நாம் கூற வருவது மார்க்கக் கல்வி மற்றும் மார்க்கத்துக்கு முரண் இல்லாத பொதுக் கல்வி தொடர்பான நூல்களும் சேகரிக்கப்பட்டு ஒரு பகுதி நேர நூலகமாவும் பள்ளிவாசலின் ஒரு பகுதி இயங்கலாம்.

உதாரணமாக மார்க்கம் தொடர்பான        சட்டங்கள், வரலாறுகள், பொதுச் சட்டம் ,  பொருளாதாரம் தொடர்பான நூல்கள், வருமானவரி மற்றும் விற்பனை வரி  போன்ற நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நூல்களை சேகரித்து வைத்து நாமும் மற்றும் நமது மாணவர்களும் படித்துக் கொள்ள மற்றும் குறிப்பெடுக்க உதவலாம். அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி நூல்களை இந்த நூலகத்தில் வாங்கி வைக்கலாம்.  எவ்வித இயக்கங்களையும் சாராத பொதுவான நடுநிலையான சஞ்சிகைகள், வார இதழ்களை அந்தந்த முஹல்லாவில் உள்ளவர்களின் ஆதரவுடன் வரவழைத்து வைக்கலாம். அமர்ந்து படிப்பவர்களுக்கு வசதியாக நாற்காலி , மேஜை, காற்றாடி ஆகிய வசதிகள் அங்கு செய்து தரப்பட வேண்டும்.  பல பள்ளிவாசல்களில் நிறைய இடங்கள் பயன்படுத்தப் படாமல் ஒதுக்குப் புறமாக இருப்பதை  நாம் பார்க்கிறோம் . அவைகளை இத்தகைய நூலகத் தேவைக்கு பயன்படுத்தலாம் என்பதை நாம் பரிசீலிக்க  வேண்டும்.

ஆய்வரங்கம் மற்றும் பயிலரங்கம்:-
பெங்களூர் நகரத்தில் இருக்கும் சிடி ஜாமி ஆ பள்ளிவாசலில் சமுதாயத்தில் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக அருமையான ஏற்பாடுகளை அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த நகருக்கு வருகை தரும் அறிஞர்களை அங்கு வரவழைத்து மாணவர்களுக்காக உரையாற்றச் செய்கிறார்கள். செமினார்  என்கிற  கருத்தரங்களை நடத்துகிறார்கள். கேள்வி பதில் நிகழ்வுகளை நடத்துகிறார்கள்.

இன்றைய நவீன யுகத்தில் கணினியின் தேவை மற்றும் பயிற்சின் தேவை ஆகியவை இன்றியமையாதாகி விட்டது. அனைவரும் இவற்றைப் பயின்று கொள்ளும்படி  பள்ளிகளில் ஒரு இடத்தை ஒதுக்கி இந்த வசதிகளை செய்து கொடுக்கலாம். கணினியை பயன்படுத்த வருகை தரக் கூடிய மாணவர்களையும் அவர்கள் கணினியைப் பயன்படுத்தும்போது வருகை தரும் தளங்களையும் கண்காணித்துக் கொள்ள வேண்டும். கரையான் புற்றெடுக்கப் பின் கருநாகம் குடி புகுந்த கதையாக மாறிவிடக் கூடாது.
மாணவர்களுக்காக நமதூரில் இருந்து வெளிநாடுகளை உயர் பதவிகளை வகிப்போர்கள் விடுமுறையில் வரும்போது அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கூடமாக பயன்படுத்தலாம். வேலைவாய்ப்புகள் இருந்தால் அவற்றைப் பற்றிய தகவல் தரும் கூடமாகவும் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு வருடமும் தேர்வுகள் முடிந்ததும் ஊரில் இருக்கும் கல்வியாளர்கள் பள்ளி வாசல்களில் ஒன்று கூடி மாணவர்களுக்கு , அவர்களின் தொடர் கல்விக்கான ஆலோசனைகளை வழங்கும் கலந்துரையாடல்கள் நிகழ்த்தும்  இடங்களாகவும் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தலாம். படித்து முடித்த இளைஞர்களின் ஒத்துழைப்புடன் தேவையான சான்றிதழ்களை பெற்றுத்தரும் கேந்திரமாகவும் பள்ளிவாசல்கள் பயன்படுத்தப்படலாம்.

ஜகாத் விநியோக மையம் :-
பள்ளிவாசல்கள்  நோன்புக் கஞ்சி பரிமாறும்   இடங்களாக மட்டுமல்லாமல் ஜகாத் மற்றும் பித்ரா மற்றும் சதக்காக்களை பங்கீடு செய்யும் கேந்திரமாகவும் செயல்படலாம். அந்தந்த முஹல்லாவில் ஜகாத் தருவதற்கு தகுதிபடைத்தோர்  பற்றிய தகவல்களை திரட்டி பதிவு செய்து வைப்பதுடன் அவர்களிடம் தேவையானால் கவுன்சளிங்க் செய்து ஜகாத்தை வசூலித்து தகுதியான ஏழைகளுக்கு வழங்கிட உதவும் நிலையங்களாக பள்ளிவாசல்கள் செயல்படலாம்.

மருத்துவ முகாம்கள் நடைபெறும் மையம் :-
இலவச கண் சிகிச்சை மற்றும் பொது வியாதிகளுக்கான சோதனைக் கூடங்களின் முகாம்களை அவ்வப்போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளிவாசல்களின் வெளிப் பகுதிகளில் ஏற்பாடு செய்யலாமே!

ஷரீஅத்  நீதி மன்றங்கள் :-
குடும்ப வழக்குகள், சொத்துப் பிரச்சனைகள் ஆகியவற்றைத்  தீர்த்துக் கொள்ள காவல்துறை மற்றும் நீதிமன்றங்களை நாடி நமக்குள் விரோதங்களையும் செலவினங்களையும்  வளர்த்துக் கொள்வதைவிட  நமக்குள் பேசி நடுநிலையாகத் தீர்த்துக் கொள்வதற்குரிய இடங்களாகப் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தலாமே!

இத்தகைய ஆக்கபூர்வமான காரியங்களைச்  செய்யாமல் பள்ளிவாசல்களில் வீணாகக் கூடி வீண் பேச்சுக்களை பேசி ஷைத்தானைக் கூட்டளியாக்கிக் கொள்ளாமல் பள்ளிவாசல்களை பன்முகக் காரியங்களுக்கும் பயன்படுத்துவதைப் பற்றி நாம் சிந்திப்போமா ?

THANKS TO  http://www.adirainews.net/2014/08/blog-post_81.html

Thursday, August 14, 2014

காயல்பட்டினம் தரும் அதிர்ச்சி! எச்சரிக்கை ரிப்போர்ட் !

கடியப்பட்டினத்தில் நுழைந்தபோதே சாவு வரவேற்றது. ‘அது' சாவு. மக்களின் முகத்தில் துக்கத்தைத் தாண்டி ஆக்கிரமித்திருக்கிறது பயம். துக்கத்துக்காகக் கூடியிருப் பவர்கள் குனிந்து கிசுகிசுக்கிறார்கள். ‘அது' பற்றியது இந்தப் பேச்சு. வாயைத் திறந்து ‘அது' பெயரைச் சொன்னாலே 'அது' வீட்டுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ‘அது'வோ ஈவிரக்கம் இல்லாமல் மக்களை வேட்டையாடுகிறது.
தமிழகத்திலேயே கதிரியக்கத்தை அதிக அளவில் எதிர்கொள்ளும் ஊர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறது கடியப்பட்டினம். ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் புதிதாக வெளியூர் ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய சூழல் உருவாகிறது. ஒவ்வொரு மாதமும் யாரோ ஒருவருக்குப் புதிதாக ‘அது' கண்டறியப்படுகிறது. வெகு சீக்கிரம் ஒரு நாள் ‘அது' கொன்றுபோடுகிறது.
அபலைகளின் கதறல்
“ஐயா, பொறுப்புள்ள பிள்ளையா. பதிமூணு வயசுல இப்பிடி ஒரு பிள்ளையை நீங்க பார்க்க முடியாது. தாய் - தந்தை மேல அப்பிடி ஒரு பிரியம், மதிப்பு. கடலுக்குப் போயி நூறு, எரநூறுக்கு உயிரைக் கொடுத்து, அப்பன் பொழைக்கிறாம்னு சொல்லி, நல்லாப் படிச்சுக் குடும்பப் பொறுப்பை ஏத்துக்கிடுவேன்னு சொல்லிக்கிட்டிருந்த பிள்ளை. ஒரு நா கைய வலிக்குண்ணாம். கடுக்குண்ணாம். ஆஸ்பத்திரி போனோம். மருந்து மாத்திரை கொடுத்தாங்க. வலி கட்டுபடல்ல. பரிசோதனை பண்ணணும்னாங்க. கடைசில அதுன்னாட்டாங்க. எலும்புல வந்துடுச்சு.
ஐயா, ஒரு பாவம் அறியாத பிள்ளைய்யா. பச்ச பிள்ளைக்கு என்ன தெரியும்? ஐயோ, ஒரு கெட்ட பழக்கம், அது இதுன்னு இருந்து செத்தாக்கூட, தப்புன்னு சொல்லி ஆத்திக்கலாமே... ஏ, ஐயா, புருனோ... உன்னையே பொறுப்பே இல்லாம பறி கொடுத்துட்டேனேய்யா...”
- மாரிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வெளிப்படும் அந்த அழுகுரல் இதயத்தைச் சுக்கு நூறாக்குகிறது.
ஒன்று, இரண்டல்ல; அங்கொன்றும் இங்கொன்றும் அல்ல; இதோ எதிர்த்த வீட்டில் ரத்தப் புற்று, அதோ பக்கத்து வீட்டில் எலும்புப் புற்று, இங்கே பின் வீட்டில் கருப்பைப் புற்று என்று கூப்பிட்டுச் சொல்கிறார்கள்.
யாருக்கும் தெரியவில்லை!
கடியப்பட்டினம் பங்குத்தந்தை செல்வராஜ், வரிசை யாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர் கள் தொடர்பான கோப்புகளை விரித்துக் காட்டுகிறார்.
“ஒவ்வொரு வருஷமும் 20 பேர் புத்துநோயால மரிச்சுப்போறாங்க. இந்தச் சின்ன ஊர்ல இதோ, ரெண்டு மாசத்துல நாலு பேர் அடுத்தடுத்து, புத்துநோயால பாதிக்கப்பட்டிருக்காங்க. கொடுமை என்னன்னா, காட்டுறதுக்கு ஆஸ்பத்திரிகூட இங்கே ஏதும் கிடையாது. ஒண்ணு திருவனந்தபுரம் ஓடணும், இல்ல, சென்னைக்கு ஓடணும். சரியான மருத்துவ வசதி, பரிசோதனை வசதி இல்லாததால, முத்துன நெலையிலதான் நோய் பாதிப்பே தெரியவருது. ஒவ்வொரு நாளும் மக்கள் வந்து கதறுறாங்க. என்ன செய்யுறதுன்னே தெரியலை” என்கிறார்.
கடற்கரை முழுவதும் பாதிப்பு
இங்கே குமரி மாவட்டத்தில் தொடங்கி அங்கே திருவள்ளூர் மாவட்டம் வரை புற்றுநோய் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. கடற்கரை ஊர்களில் நுழையும்போதெல்லாம், மக்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் அவர்கள் சொல்லும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. அரசுக்கோ ஊடகங்களுக்கோ இதன் தீவிரம் தெரியவில்லை. நம் கடற்கரை மக்கள் வாழ்க்கையை எந்த அளவுக்குப் புற்றுநோய் குலைத்துப்போட்டிருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணம் காயல்பட்டினம்.
ஒரு உயிர் ஒரு உலகம்
காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே எதிர்ப்படுகிறார்கள் புற்றுநோயாளிகள். சுப்பிரமணியன் பேருந்து நிலைய வளாகத்தில் வல்கனைசிங் தொழில் செய்கிறார். மனைவியும் புற்றுநோயாளி, மகனும் புற்றுநோயாளி. “டயருக்கு பஞ்சர் ஒட்டிப் பொழப்பு நடத்துறவங்க. பொஞ்சாதிக்கு நுரையீரல்ல புத்து. புள்ளைக்கு ரத்தத்துல புத்து. ஒரே நேரத்துல ஒருத்தரை சென்னையிலேயும் இன்னொருத்தரை மதுரையிலேயும் வெச்சுக்கிட்டுப் போராடுனேன் பாருங்க. எவ்வளவோ செலவு செஞ்சி பாத்தாச்சு. பொஞ்சாதி போய்ட்டாங்க. பிள்ளையைக் காப்பாத்தணும், அதுக்காகத்தான் ஓடிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லும் தந்தையையே பார்த்துக்கொண்டிருக்கிறான் ஐயன்ராஜ். மருத்துவச் செலவை எதிர்கொள்ள படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவோடு கடையில் உதவிக்கு உட்கார்ந்திருக்கிறான். “அப்பா ஒண்டியா எவ்ளோண்ணே கஷ்டப்படுவாங்க, பாவம் இல்லேண்ணே, என்னால பெருசா ஒண்ணும் முடியாது. ஆனா, பக்கத்துலேயே உட்கார்ந்துருக்கும்போது அப்பாவுக்கு ஒரு ஆறுதலா இருக்கு” என்கிறான், கண்ணில் ததும்பும் நீரை அடக்கிக்கொண்டு.
புற்றுக்கு எதிராகத் திரளும் ஊர்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வாழும் பாரம்பரியமான ஊர் காயல்பட்டினம். சமீப காலத்தில் மட்டும் 60 பேர் இறந்திருக்கிறார்கள்; அவர்களில் 20 பேர் புற்றுநோயாளிகள் என்கிறார்கள் ஊர்க்காரர்கள். அரசு கண்டுகொள்ளாத நிலையில், புற்றுக்கு எதிராக இப்போது ஊரே திரள ஆரம்பித்திருக்கிறது. ‘காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு’ என்று ஒரு குழுவை அமைத்து அறிவியல்ரீதியிலான ஆய்வுகளில் களம் இறங்கியிருக்கிறார்கள்.
“ஒண்ணுபட்ட சமூக அமைப்பு உள்ள ஊர் காயல் பட்டினம். பொண்ணு கொடுக்க, எடுக்க எல்லாமே பெரும்பாலும் இங்கைக்குள்ளேதான் நடக்கும். அதனால, இந்த நோயால பாதிக்கப்பட்டாகூட மக்கள் வெளியே சொல்லத் தயங்குனாங்க. பலர் இதை வெளியே சொல்ல விரும்புறதில்லை. ஆனா, இப்படியே போனா இந்தத் தலைமுறையையே பறி கொடுக்க வேண்டியதாம்னு சொல்லிக் களத்துல எறங்கிட்டோம்.
ஒவ்வொரு வீட்டுலேயும் எத்தனை பேர் புத்துநோயால் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு 40 தன்னார்வலர்களை வெச்சுக் கணக்கெடுத்தோம். விஞ்ஞான ரீதியா என்ன காரணமா இருக்கும்னு நிலத்தடித் தண்ணீர்ல ஆரம்பிச்சு மளிகைக் கடை சாமான்கள் வரைக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரியை அனுப்பிச்சு ஆய்வுசெஞ்சோம். புத்துநோய் மருத்துவர் சாந்தாவைக் கூட்டிட்டு வந்து இந்த அறிக்கைங்க, பாதிப்பு எல்லாத்தையும் கொடுத்து ஆலோசனை கேட்டோம். தொடர்ந்து அரசாங்கத்துக் கதவைத் தட்டிக்கிட்டேதாம் இருக்கோம். ஆனா, செவிசாய்க்க ஆள் இல்லை” என்கிறார் உள்ளூரில் மருத்துவ உதவிக்காக இயங்கும் ஷிஃபா கூட்ட மைப்பின் செயலாளரான தர்வேஷ் முஹம்மத்.
கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 125 பேருக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் கண்டறியப் பட்டுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவ அறிக்கைகளோடு.
ஊருக்குள் நோயாளிகளுடன் உரையாடும்போது, நோய் வேதனையைக் காட்டிலும் அரசின் புறக்கணிப்பு தரும் விரக்தி அவர்களைத் துளைத்தெடுப்பதை உணர முடிகிறது. நான்கு குழந்தைகளின் தாயான ஜீனத் தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்துப் பேசும்போது துக்கம் வெடிக்கிறது. தந்தை முஹம்மது ஹசன் சிறுநீர்ப்பை புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளான பிறகு, தாய் ஆப்பம் விற்கப்போவதாகச் சொல்லும் 12 வயது சஹர் பானு குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது மலங்க மலங்க விழிக்கிறாள். “அப்பாவுக்கு நல்லாயிடுமாண்ணே?” என்று அவள் கேட்கும் கேள்வி துரத்திக்கொண்டே வருகிறது.
தொடர்ந்து கடற்கரையோர ஊர்களில் நோயாளி களைச் சந்திக்கும்போதெல்லாம் எழும் கேள்வி ஒன்று தான்: இவ்வளவு நடக்கிறது, அரசாங்கம் என்ன செய்கிறது?
(அலைகள் தழுவும்...)
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

thanks to  http://tamil.thehindu.com

முஸ்லிம்களுக்கு, அமெரிக்காவில் பெருகி வரும் அமோக ஆதரவு !

காஸா போரின் எதிர்விளைவாக, மேற்கத்திய நாடுகளில் இடதுசாரி யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள், இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர். மேற்கத்திய நாடுகளின் வெகுஜன ஊடகங்கள் உண்மைகளை மறைத்து, திரித்து கூறி வந்த போதிலும், சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவும் தகவல்கள், ஒரு சமூக அசைவியக்கத்தை உண்டாக்கி உள்ளது.

இஸ்ரேலுக்கு அடுத்ததாக யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவில், தலைமுறை இடைவெளி காரணமாக யூத குடும்பங்களுக்குள், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடிக்கின்றன. இஸ்ரேலை நியாயப் படுத்தும் பெற்றோரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களை எதிர்க்கும் பிள்ளைகளும், அடிக்கடி அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும், இஸ்ரேல் குறித்த கருத்து முரண்பாடுகள், மாணவர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டாக்கி உள்ளது. சியோனிச யூத மாணவர்களும், பெந்தெகொஸ்தே சபைகளை சேர்ந்த கிறிஸ்தவ மாணவர்களும் ஓரணியில் நின்று இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். மறு பக்கத்தில், மதச் சார்பற்ற யூத மாணவர்களும், இடதுசாரி மாணவர்களும் எதிர் அணியில் நின்று, இஸ்ரேலை எதிர்க்கிறார்கள்.

இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி அணியினரின் பலம் கூடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய மாணவர்கள் அந்த அணியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இடதுசாரிகளின் பக்க நியாயத்தை கூறும் தகவல்கள், அதிகளவில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருவதும் அதற்கு ஒரு காரணம். தமிழ் பேசும் இணைய சமூகத்திலும் அது போன்ற மாற்றங்களை உணர முடியும். ஒரு வருடத்திற்கு முன்பு வரையில் கூட, இஸ்ரேலின் சியோனிச கொள்கையை வெளிப்படையாக ஆதரித்து வந்த, வலதுசாரி தமிழ் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர், அந்த நிலைப்பாட்டை கைவிட்டுள்ளனர்.

பிரிட்டனில், பாலஸ்தீன நீதிக்கான யூதர்கள் (Jews For Justice For Palestinians) என்ற இடதுசாரிகளின் அமைப்பு, 2003 முதல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், ஓரிரு வருடங்களுக்கு முன்னர் கூட யாருக்கும் தெரியாமல் இருந்த அந்த அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, சமீப காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. லண்டனில் ஒவ்வொரு வாரமும் நடக்கும் காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், இடதுசாரி யூதர்களின் பிரிவு ஒன்று தவறாமல் கலந்து கொள்கின்றது. அமெரிக்க நகரங்களிலும், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற பிற ஐரோப்பிய நகரங்களிலும், இடதுசாரி யூதர்களின் அணி ஒன்று, ஊர்வலங்களை ஒழுங்கமைக்கும் குழுவில் கலந்து கொள்கின்றது.

லண்டனில், டவுனிங் தெருவில், பட்டப்பகலில் ஓர் இஸ்ரேலிய பிரஜை தனது கடவுச் சீட்டை எரித்து பரபரப்பூட்டினார். அந்த சம்பவத்திற்குப் பின்னர், லண்டனில் வாழும் யூதர்கள் பலர், வெளிப்படையாக இஸ்ரேலை விமர்சித்து பேசும் துணிவைப் பெற்றுள்ளனர். (இவ்வளவு காலமும் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள், யூத சமூகத்திற்குள் கடுமையாக அடக்கப் பட்டன.) மேலும், யூதர்களை வெறுக்காமல் இஸ்ரேலை விமர்சிப்பது எப்படி என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரம், ஒவ்வொரு ஆரப்பாட்டங்களின் போதும் மக்களுக்கு விநியோகிக்கப் பட்டு வருகின்றது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. சிங்களவர்களும், தமிழர்களும் பிரிந்து நின்றால் இலங்கை அரசுக்கு கொண்டாட்டம். அதனால், எத்தகைய இடதுசாரி அமைப்பிற்குப் பின்னாலும் மக்கள் சென்று விடாதவாறு, அரசு தனது கைக்கூலிகளைக் கொண்டு எதிர்ப் பிரச்சாரங்களை முடுக்கி விடும். அதே சூழ்ச்சியை, மேற்கத்திய நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

மேற்கத்திய நாடுகளில் வாழும், "ISIS ஆதரவு முஸ்லிம் மதவாதிகள்", பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் புகுந்து, யூதர்களுக்கு எதிரான கோஷம் எழுப்புவார்கள். அத்தகைய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள், "எமது நாட்டில் யூத வெறுப்பு அதிகரித்து வருவதால், யூத மக்கள் பயந்து போயிருக்கிறார்கள்" என்று வதந்திகளை பரப்பி விடுவார்கள். அந்த நாடுகளில் உள்ள வலதுசாரி சியோனிச அமைப்புகளும் தரவுகளை தொகுத்து அறிக்கையாக சமர்ப்பிக்கும். இவை எல்லாம், மேற்கத்திய உளவு நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றன என்பது இரகசியம் அல்ல. உலகில் உள்ள எல்லா சமூகங்களிலும், குறிப்பிட்ட அளவு இனவாதிகள் இருப்பார்கள். ஆனால், அவர்களை வளர விடாமல் தடுப்பது நாகரிகமடைந்த மக்களின் கடமை ஆகும்.

இஸ்ரேலிலும், இடதுசாரி யூதர்கள், காஸா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இஸ்ரேலில் அரச அடக்குமுறை மிகவும் கடுமையாக உள்ளது. இஸ்ரேலிய இடதுசாரி கட்சியொன்றை சேர்ந்த, பாலஸ்தீன பூர்வீகத்தை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், கினேசெட் எனும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது, "ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம்" என்று குறிப்பிடவில்லையாம். அந்தக் குற்றத்திற்காக, அவருக்கு ஆறு மாத காலத்திற்கு பாராளுமன்ற பேச்சுரிமை மறுக்கப் பட்டுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்தளவு அடக்குமுறை என்றால், பிற சமூக ஆர்வலர்களின் நிலைமை பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

இஸ்ரேலை வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக கணித்தால், அங்கே தான் வறுமை அதிகமாக உள்ளது. 2011 டெல் அவிவ் நகரில், அரசுக்கு எதிராக Occupy பாணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போர் நடக்கும் காலத்தில் வழமையாகவே தேசியவெறி அதிகரிக்கும். ஹமாசின் ஏவுகணைகளை காட்டி, இஸ்ரேலின் பாதுகாப்பு முக்கியம் என்று செய்யப் படும் பிரச்சாரங்கள், அப்பாவி மக்களை இலகுவில் கவரக் கூடியவை. "மதம் மக்களின் அபின்" என்றார் கார்ல் மார்க்ஸ். (அவரும் ஒரு யூதர் தான்.) மதம் மட்டுமல்ல, தேசிய வெறியும் மக்களின் அபின் தான் என்று, நூறு வருடங்களுக்கு முன்னரே, தன்னை ஒரு சியோனிச எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டார், மாமேதை ஐன்ஸ்டைன். (அவரும் ஒரு யூதர் தான்.)

(இந்தக் கட்டுரை சில பத்திரிகை செய்திகளை தழுவி எழுதப் பட்டது.)

தகவல்களுக்கு நன்றி :
NRC Handelsblad (நெதர்லாந்து) 
Haaretz (இஸ்ரேல்)

thanks to http://kalaiy.blogspot.com/2014/08/blog-post_13.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!